கடன் தீர்க்கும் வழிபாடு!
கும்பகோணம்- திருவாரூர் பாதையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தி்ல் உள்ளது திருச்சேறை. இங்கே ஸ்ரீசெந்நெறியப்பர் ஆலயத்தில் மேற்குத் திருச்சுற்றில் சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீருணவிமோசன லிங்கேஸ்வரர்.
இவரது சந்நிதியில்...
விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹனாய நமச்சிவாய
- எனும் ஸ்தோத்திரத்தை ஓதி, ஸ்ரீருணவிமோசனரை 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து பூஜித்துப் பிரார்த்தித்து, 11-வது திங்களன்று அபிஷேக- ஆராதனைகள் செய்தால், கடன் தொல்லைகள் யாவும் நீங்கும்.
ஸ்ரீருணவிமோசனரின் அருள் தரிசனம் இங்கே உங்களுக்காக...
ஏழேழு ஜென்மப் பாவம் போக்கும்
பிரதோஷ திருத்தலம்!
மூலவராகக் குடிகொண்டிருக்கும் சிவலிங்கத் திருமேனியை, சாளரத்தின் வழியே நந்திதேவர் தரிசிக்கும் ஆலயங்கள் வெகு குறைவு.
மருதாடு ஸ்ரீபுரந்தரீஸ்வரர் திருக்கோயில் சாளரம் வழியே நந்திதேவர், சிவனாரைத் தரிசிக்கு்ம், ஆலயம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் வழியில், சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மருதாடு.
இப்படியான ஆலயங்கள்... சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவை; அங்கே பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டால், எல்லா நலனும் அமையப் பெறலாம் என்பது நம்பிக்கை! ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!